தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் இங்கிலாந்திடம் இந்தியா வலியுறுத்தல்


தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் இங்கிலாந்திடம் இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 April 2018 11:18 AM GMT (Updated: 20 April 2018 11:18 AM GMT)

தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என இங்கிலாந்தை இந்தியா வலியுறுத்தி உள்ளது. #PMModi #UKForeignOffice

லண்டன், 

இங்கிலாந்து சென்று உள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்றது. இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றனர். அப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் பின்னர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டது.

இந்த சம்பவங்களை படம் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் பிடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பிரதமர் மோடியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், ‘இந்த போராட்டம் மற்றும் தேசியக்கொடி கிழிப்பு சம்பவம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்களும் வருத்தம் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் எச்சரித்து இருந்தோம். 

இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது கிழிக்கப்பட்ட தேசியக்கொடி மாற்றப்பட்டு விட்டது’ என்றார். இச்சம்பவத்திற்கு இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக மன்னிப்பை கோரியது.

இந்தியா வலியுறுத்தல் 

இந்நிலையில் பிரதமர் மோடியின் பயணத்தின் போது தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என இங்கிலாந்தை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பேசுகையில், “தேசியக்கொடி சம்பவம் எங்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. உயர்மட்ட அளவில் இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவித்து உள்ளது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்திய தேசியக்கொடி மாற்றப்பட்டது. இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், சட்ட நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தில் போராட்டம் நடைபெற்ற போது இச்சம்பவத்தில் தொடர்புடைய பொறுப்பாளிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்,” என்றார். 


Next Story