எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை


எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
x
தினத்தந்தி 21 April 2018 9:31 AM GMT (Updated: 21 April 2018 9:31 AM GMT)

பிறந்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்

மத்தியப் பிரதேசத்தில் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் நபர் ஒருவர் நேற்று காலை 4.45 மணியளவில் ராஜ்வாடா கோட்டை பகுதியில்  சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்று, சற்று தொலைவில் உள்ள வணிக வளாகத்தின் தரைதளத்தின் கீழ் இருக்கும் தளத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபர் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு செல்வது போன்று உள்ளதால், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவனிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.  குற்றவாளியின் பெயர் சுனில் பீல்  என தெரியவந்து உள்ளது. குற்றவாளி குழந்தையின் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவர் ஆவார். 

நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது போலீஸ் நிலைய குற்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமையில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 2016-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண அறிக்கையில் 2,467 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தில் 90 சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் தான் நடைபெறுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தான் இந்த கொடூர செயலில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story