பெண்ணை பின்தொடர்ந்த வழக்கு; ஏழ்மை நிலையால் தண்டனையில் இருந்து குற்றவாளி விடுவிப்பு
டெல்லியில் பெண்ணை பின்தொடர்ந்த வழக்கில் குற்றவாளியின் ஏழ்மை நிலையை கவனத்தில் கொண்டு சிறை தண்டனையில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். #StalkingCase
புதுடெல்லி,
டெல்லியில் தென்கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் மீது கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 27ந்தேதி பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2 மாதங்களாக என்னை பின்தொடர்ந்து வரும் இவர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்.
படிக்க செல்லும்பொழுதும் பின்தொடர்ந்து வருகிறார். விருப்பம் இல்லை என்று கூறிய பின்னரும் அவர் பின்தொடருகிறார் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ராஜாவை குற்றவாளி என அறிவித்து 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராஜா, ஏழ்மை நிலையில் உள்ளேன் என்றும் தன் மீது வேறு எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை கவனத்தில் கொண்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி குல்ஷன் குமார் தனது தீர்ப்பில், நன்னடத்தையை பின்பற்ற வேண்டும் என கூறியதுடன், ரூ.20 ஆயிரம் ஜாமீன் தொகையை செலுத்தும்படி கூறி சிறை தண்டனையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.