22 பத்ரிநாத் யாத்ரீகர்களின் உயிரை காப்பாற்றிய சாலையோர மரம்
ராஜஸ்தானை சேர்ந்த 22 பத்ரிநாத் யாத்ரீகர்களின் உயிரை சாலையோரம் இருந்த மரம் காப்பாற்றி உள்ளது. #BadrinathPilgrims
கோபேஷ்வர்,
ராஜஸ்தானை சேர்ந்த 22 பேர் பத்ரிநாத்துக்கு புனித பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பேருந்து ஒன்றில் அவர்கள் புறப்பட்டனர். அந்த பேருந்து இன்று காலை காவுசர் பகுதி அருகே வந்தபொழுது எதிரே வந்த லாரி ஒன்று அதன்மீது மோதியது.
இதில் நிலை குலைந்து அந்த பேருந்து 90 அடி ஆழ பள்ளத்தினை நோக்கி பாய்ந்தது. ஆனால் சாலையோரம் இருந்த மரம் ஒன்று பாதுகாப்பு சுவர் போல அந்த பேருந்து பள்ளத்தில் விழாமல் தடுத்து நிறுத்தியது.
உடனடியாக இதுபற்றிய தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு இந்தோ திபெத் எல்லை போலீசார் சென்று யாத்ரீகர்களை மீட்டனர். மீட்கப்பட்டோர் இந்தோ திபெத் எல்லை போலீசின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் ஆபத்து கட்டத்தினை கடந்து விட்டனர் என போலீசார் ஒருவர் கூறியுள்ளார்.