கர்நாடக தேர்தல் கூட்டம்; மக்கள் முன் அழுது, விழுந்து கும்பிட்ட பா.ஜ.க. வேட்பாளர்


கர்நாடக தேர்தல் கூட்டம்; மக்கள் முன் அழுது, விழுந்து கும்பிட்ட பா.ஜ.க. வேட்பாளர்
x
தினத்தந்தி 5 May 2018 3:00 PM GMT (Updated: 5 May 2018 3:00 PM GMT)

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் ஒருவர் தேர்தல் கூட்டத்தில் அழுததுடன் மக்கள் முன் விழுந்து கும்பிட்டார். #KarnatakaAssemblyElection

கலபுரகி,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வருகிற 12ந்தேதி நடைபெற உள்ளது.  இதற்காக ஆளும் காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் செடாம் தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜ்குமார் பாட்டீல் தெல்குர் இன்று நடந்த கட்சியின் தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

இதற்கு முன் கடைசியாக நடந்த 3 தேர்தல்களில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டவர் தெல்குர்.  இந்நிலையில் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என கூறி அங்கு கூடியிருந்த மக்கள் முன் அழுது விட்டார்.  பின்னர் கீழே விழுந்து அவர்களின் முன் சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மகளிரணி பொது செயலாளர் சுருதி மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story