பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஆய்வு அறிக்கைகளை வெளியிட பாரத ரிசர்வ் வங்கி மறுப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஆய்வு அறிக்கைகளை வெளியிட பாரத ரிசர்வ் வங்கி மறுப்பு
x
தினத்தந்தி 13 May 2018 9:42 AM GMT (Updated: 13 May 2018 9:42 AM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஆய்வு அறிக்கைகளை வெளியிட பாரத ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து உள்ளது. #PNBscam #RBI


புதுடெல்லி,

இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய வங்கி மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான தகவல்கள் இவ்வருட தொடக்கத்தில் வெளியாகியது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள பாரத ரிசர்வ் வங்கியும் தனிப்பட்ட முறையில் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

இப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மோசடி தொடர்பான தகவல்களை தெரிவிக்க கோரி பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

ஆர்டிஐ கேள்விகளுக்கு பதில் கொடுத்து உள்ள பாரத ரிசர்வ் வங்கி, நாங்கள் (ஆர்பிஐ) வங்கிகளின் கணக்குகளை தணிக்கை செய்வது கிடையாது. இருப்பினும் வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்கிறோம், ஆபத்து அடிப்படையில் மேற்பார்வையும் செய்கிறோம் என தெரிவித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கான விபரங்களை கொடுத்து உள்ள ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2007 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தேதியை குறிப்பிட்டு உள்ளது 2011-ம் ஆண்டை தவிர்த்து. அந்த ஆண்டுக்கான தேதிகள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. 

ஆய்வு அறிக்கைகளின் நகல்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட போது, வங்கியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இத்தகவல்கள் விலக்கு பெறுகிறது என ஆர்.பி.ஐ. தெரிவித்து உள்ளது. வழக்கு விசாரணை நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்கான பிரிவுகளை சுட்டிக்காட்டி தகவல்களை தெரிவிக்க மறுத்து உள்ளது  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 (1) (a), (d), (j) மற்றும் (h) ஆகிய பிரிவுகளின்படி வங்கிகளின் ஆய்வு அறிக்கைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் விலக்கு பெறுகிறது என ஆர்.பி.ஐ. தெரிவித்து உள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது.


Next Story