கோவாவுக்கு நிரந்தர முதல்வர் வேண்டும் - காங்கிரஸ் ‘சில வாரங்களில் திரும்பி விடுவேன்’ மனோகர் பாரிக்கர்


கோவாவுக்கு நிரந்தர முதல்வர் வேண்டும் - காங்கிரஸ் ‘சில வாரங்களில் திரும்பி விடுவேன்’ மனோகர் பாரிக்கர்
x
தினத்தந்தி 13 May 2018 3:08 PM GMT (Updated: 13 May 2018 3:08 PM GMT)

மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோவாவுக்கு நிரந்தர முதல்–மந்திரி வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #ManoharParrikar


பனாஜி, 
 
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய நோய் காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். கோவாவில் 3 மூத்த மந்திரிகளை கொண்ட ஆலோசனை குழு மாநில விவகாரங்களை கவனித்து வருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் நிரந்தர முதல்–மந்திரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் கவர்னர் உள்ளிட்டோரிடம் மனுவும் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் பனாஜியில் மிராமர் கடற்கரையையொட்டி உள்ள கோவாவின் முதலாவது முதல்–மந்திரியான தயானந்த் பன்டோட்கரின் நினைவகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையில், பனாஜியில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் பேசிய வீடியோ பதிவு அங்கு உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டது. அதில் பேசிய மனோகர் பாரிக்கர் ‘அடுத்த சில வாரங்களில் நான் கோவா திரும்பிவிடுவேன்’ என கூறினார்.

Next Story