1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: வெளிநாட்டு பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் சலுகை


1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: வெளிநாட்டு பயணிகளுக்கு ரெயில்வே வாரியம் சலுகை
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 8:34 PM GMT)

வெளிநாட்டு பயணிகள் இனி 1 ஆண்டுக்கு முன்பாகவே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

புதுடெல்லி, 

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

Next Story