ஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


ஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 14 May 2018 9:35 AM GMT (Updated: 14 May 2018 9:35 AM GMT)

ஒடிசாவில் பாதுகாப்பு படை மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 புவனேஸ்வர், 

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கோலங்கி கிராமம் அருகே உள்ள  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று போலீசாரும், சிறப்பு  பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று மாவோயிஸ்டுகள் இருந்த  இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதேபோல் பலாங்கிர் மாவட்டம் தட்காமல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மற்றொரு மாவோயிஸ்டு கும்பல் கூடி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரின் தலைக்கு ரூ.9 லட்சம் அரசு பரிசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவங்களில் மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்றும் கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அப்போது மோதல் வெடித்ததில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

Next Story