பிரதமர் மோடி மிரட்டுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்


பிரதமர் மோடி மிரட்டுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்
x
தினத்தந்தி 14 May 2018 10:17 AM GMT (Updated: 14 May 2018 10:17 AM GMT)

பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசிவருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் புகார் கொடுத்து உள்ளனர். #ManmohanSingh #PMModi

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி கர்நாடக மாநில தேர்தலின்போது எங்களை மிரட்டும் வகையில் பேசினார் எனவும் புகார் மனுவை அளித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தேர்தலின் போது பிரதமர் மோடி மிரட்டும் வகையில் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது, பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று நடந்துக்கொள்ளக் கூடாது எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    “காங்கிரஸ் அல்லது பிற அரசியல் கட்சி தலைவர்கள், தனிநபர்களுக்கு எதிராக தேவையில்லாத மற்றும் மிரட்டும் வகையிலான வார்த்தைகளை பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுப்பார்,” என மன்மோகன் சிங் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் கூறிஉள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ப.சிதம்பரம், அசோக் கெலட், மல்லிகார்ஜுன கார்கே, கரண் சிங், அம்பிகா சோனி, கமல் நாத், ஆனந்த் சர்மா, மோதிலால் வோரா, திக்விஜய் சிங், முகுல் வாஸ்நிக் ஆகியோரால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர்கள் தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும், உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என மோடி பேசிய வீடியோவை மையமாக வைத்து காங்கிரஸ் புகார் கொடுத்து உள்ளது. 

இந்தியாவில் முன்னதாக பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் பொது மற்றும் தனியார் கூட்டங்களில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி விடுத்து உள்ள எச்சரிக்கையானது கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பு முறையில் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது. பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிகவும் அவமதிப்பதாகவும், அமைதியை குலைப்பதாகவும் உள்ளது என மன்மோகன் சிங் மற்றும் பிற தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

Next Story