சுனந்த புஷ்கர் மரணம்: தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது குற்றசாட்டு


சுனந்த புஷ்கர் மரணம்: தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது குற்றசாட்டு
x
தினத்தந்தி 14 May 2018 10:44 AM GMT (Updated: 14 May 2018 12:14 PM GMT)

சுனந்த புஷ்கர் மரணத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் டாக்டர் குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருந்தது என்று கூறி இருந்தது. 
இதுபற்றி விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசின் சிறப்பு விசாரணைக் குழு சுனந்தாவின் குடல் பாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அந்நாட்டின் எப்.பி.ஐ. புலனாய்வு துறை மூலம் ஆய்வக பரிசோதனையும் மேற்கொண்டது. 

அதில் சுனந்தாவின் உடலில் கதிரியக்க பொருட்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, எப்.பி.ஐ. மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வது இறுதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 

இந்த குழு தனது அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் அண்மையில் தாக்கல் செய்தது. அதில், சுனந்தாவின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது பற்றி உறுதி தகவல் எதுவும் கூறப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிறப்பு விசாரணை குழு எப்.பி.ஐ. மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து இறுதி முடிவை தெரிவிக்கும்படி மருத்துவ குழுவை கேட்டுக் கொண்டு உள்ளது. 

மேலும் சுனந்தாவின் செல்போனில் இருந்து நீக்கப்பட்ட போன் உரையாடல்களை பெற்று அதன் அடிப்படையில் இந்த வழக்குகின் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான  வழக்கில் டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தற்கொலைக்கு சசிதரூர் தூண்டியதாக   குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் வழக்கு அடுத்த 24ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு இந்திய குற்றவியல் பிரிவின் பிரிவு 306 மற்றும் 498 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றசாட்டில் சசி தரூர்  சாட்சியம் அழித்து இருக்கலாம் அல்லது தற்கொலைக்கு  தூண்டியதாக  கூறப்பட்டு உள்ளது. ஐபிசி. 302 வது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் யார்மீதும் சுமத்தப்படவில்லை. 

Next Story