மத்திய மந்திரிசபையில் மாற்றம்; ஸ்மிரிதி இரானியின் இலாகா பறிப்பு


மத்திய மந்திரிசபையில் மாற்றம்; ஸ்மிரிதி இரானியின் இலாகா பறிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 8:14 PM GMT)

மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டு, ஸ்மிரிதி இரானியின் இலாகா பறிக்கப்பட்டது.


புதுடெல்லி,

மத்திய மந்திரிசபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. ஸ்மிரிதி இரானியிடம் இருந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு இலாகா பறிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது மந்திரிசபையை மாற்றி அமைத்தார். நிதி மந்திரி அருண்ஜெட்லி சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்து கொண்டு இருப்பதால், அவர் கவனித்து வந்த நிதி இலாகா, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்மிரிதி இரானியிடம் இருந்த தகவல் மற்றும் ஒலிபரப்பு இலாகா, அந்த துறையின் ராஜாங்க மந்திரியான ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு வழங் கப்பட்டு உள்ளது. அவர் அந்த துறையில் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக இருப்பார். இவரிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் உள்ளது. ஸ்மிரிதி இரானி இனிமேல் ஜவுளித்துறை இலாகாவை மட்டும் கவனிப்பார்.

ராஜாங்க மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானத்திடம் இருந்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இலாகா, ராஜாங்க மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அல்போன்ஸ் கன்னன்தானம் இனி சுற்றுலா இலாகாவை மட்டும் கவனிப்பார். எஸ்.எஸ்.அலுவாலியாவிடம் இருந்து குடிநீர் மற்றும் சுகாதார துறை விடுவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை ஜனாதிபதி மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றில் வெளியிட்டு உள்ளது.

Next Story