சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி


சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா  36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி
x
தினத்தந்தி 15 May 2018 12:37 PM GMT (Updated: 15 May 2018 12:37 PM GMT)

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவிடம் படுதோல்வி அடைந்தார். #Siddaramaiah

பெங்களூரு, 

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றியை தனதாக்குகிறது.  

தேர்தலில் முதல்–மந்திரி சித்தராமையா சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியிலும் என இரு தொகுதிகளில் களமிறங்கினார். கடந்த 2013–ம் ஆண்டு தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தனது மகனை வருணாவில் களமிறக்கிய சித்தராமையா, தொகுதி மாறி சாமுண்டீஸ்வரியில் போட்டியிட்டார். ஆனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடா கடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.  அவரே அக்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 

இதனால் சாமுண்டீஸ்வரியில் சித்தராமையாவுக்கு வெற்றி எளிதல்ல என்று உளவுத்துறை ஆய்வில் தெரியவந்தது. அதன்படியே இப்போது நடந்து உள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா படுதோல்வியை தழுவி உள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவிடம் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்து உள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன், பா.ஜனதா கூட்டணி அமைத்து சாமுண்டீஸ்வரியில் சித்தராமையாவை வீழ்த்திவிட்டதாக காங்கிரசார் குற்றம்சாட்டி உள்ளனர்.
 
  பாதாமி தொகுதியில் சித்தராமையா வெற்றியை தனதாக்கி உள்ளார். தன்னுடைய மகன் யதீந்திராவின் அரசியல் பிரவேசத்துக்காக வருணா தொகுதியை விட்டுக் கொடுத்த சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story