பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து


பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து
x
தினத்தந்தி 15 May 2018 9:45 PM GMT (Updated: 15 May 2018 8:16 PM GMT)

சாலையில் வாகனம் நிறுத்திய தகராறில் ஒருவர் பலியான வழக்கில் பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி,

சாலையில் வாகனம் நிறுத்திய தகராறில் ஒருவர் பலியான வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்துவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில சுற்றுலா மந்திரியாக இருக்கிறார். பா.ஜனதா முன்னாள் எம்.பியான அவர் கடந்த ஆண்டு பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரசில் இணைந்தார். அக்கட்சி சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார்.

அவர் மீது சாலையில் வாகனம் நிறுத்திய தகராறில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. 1988–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27–ந்தேதி சித்து பாட்டியாலா நகரின் ஷெரங்வாலா கேட் பகுதியில் உள்ள சாலை சந்திப்பின் அருகே நடுரோட்டில் தனது காரை நிறுத்தி இருந்தார்.

அங்கு மாருதி காரில் வந்த குர்னாம் சிங்(வயது 65) என்பவர் சித்துவையும், அவருடைய நண்பர் ரூபிந்தர் சாந்துவையும் காரை நகர்த்தி வழிவிடும்படி கூறியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் குர்னாம் சிங் பலத்த காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் சித்துவையும், சாந்துவையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால் விசாரணை கோர்ட்டு இருவரையும் கொலை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதனால் போலீசார் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். 2006–ல் கீழ் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த ஐகோர்ட்டு, கொலை நோக்கமின்றி மரணத்தை ஏற்படுத்துதல் பிரிவின்(304–2) கீழ் இருவருக்கும் தண்டனை விதித்தது. அதன்படி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

2007–ல் இந்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சஞ்சய் கி‌ஷன் கவுன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள் நடந்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 323 பிரிவின் (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்) கீழ் சித்துவுக்கு சிறை தண்டனை இன்றி ரூ.1,000 அபராதம் மட்டும் விதிப்பதாக தெரிவித்தனர்.

அவருக்கு ஐகோர்ட்டு விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூபிந்தர் சிங் சாந்துவை வழக்கில் இருந்து நீதிபதிகள் விடுவித்தனர்.


Next Story