உள்ளேன் ஐயா என்பதற்கு பதில் ஜெய்ஹிந்த் என கூற மத்திய பிரதேச அரசு உத்தரவு
மத்திய பிரதேசத்தில் பள்ளி கூடங்களில் உள்ளேன் ஐயா என்பதற்கு பதில் ஜெய்ஹிந்த் என மாணவ மாணவியர் கூற அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் பள்ளி கல்வி துறை மந்திரி விஜய் ஷா சமீபத்தில் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, 1.22 லட்சம் அரசு பள்ளிகள் மற்றும் 35 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு சமீபத்தில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற கல்வி ஆண்டு முதல் பள்ளி கூடங்களில் மாணவ மாணவியர் வருகை பற்றிய அழைப்பின்பொழுது அவர்கள் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும்.
அவர்கள் ஆங்கிலத்தில் உள்ளேன் ஐயா அல்லது இருக்கிறேன் ஐயா என்ற அர்த்தத்தில் கூறுகின்றனர். இந்த ஆங்கில ஒப்புதல்கள் என்ன சாதனை படைத்துள்ளது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் சமீபத்திய உத்தரவு குழந்தைகளிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கில் இருக்கும் என கூறியுள்ளார்.
ஜெய்ஹிந்த் என கூறுவது நாட்டின் மீது அன்பை வளர்க்கும். மாணவ மாணவியரிடையே தேசப்பற்றை வளர்க்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் ஜெய்ஹிந்த் என வரவேற்கும்பொழுது கூறுகின்றனர் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று கடந்த ஆண்டில் இருந்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தேசிய கொடி தினமும் ஏற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.