வன்னியர் அறக்கட்டளை சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்குவதை தடுக்க தமிழக அரசு 2014–ம் ஆண்டு சட்டம் இயற்றியது.
புதுடெல்லி,
சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் பாலு, எஸ்.எம்.எம்.கல்வி அறக்கட்டளை, வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்டோர் இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 2016–ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது.
மேலும் வன்னியர் அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு 8 ஆண்டு காலம் ஆகியும், காலதாமதம் செய்த தமிழக அரசுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை வன்னியர் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்றும், புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க முறையாக விண்ணப்பித்தால் அவற்றை தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர் அறக்கட்டளைக்கு புதிதாக சட்டக்கல்லூரி வழங்க அனுமதித்து உத்தரவு பிறப்பித்தனர்.