தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மோடி அவர்களே மவுனம் கலையுங்கள் சத்ருகன் சின்ஹா காட்டம்


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மோடி அவர்களே மவுனம் கலையுங்கள் சத்ருகன் சின்ஹா காட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 2:08 PM GMT (Updated: 24 May 2018 2:08 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள சத்ருகன் சின்ஹா ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? பாசிச ஆட்சி நடக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். #ShatrughanSinha #PMModi


புதுடெல்லி,


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு பா.ஜனதா மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடிக்கும் கேள்வியை எழுப்பி உள்ளார். 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வரிசையாக பதிவிட்டு உள்ள செய்தியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸ் சுட்டுக்கொன்றது வேதனையளிக்கிறது, வெட்கப்பட வேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது என பாரதத்தாய் உணர்கிறாள். நாம் அனைவரும் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா? அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா?. அமைதியான முறையில் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது எந்தஒரு எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கி மூலம் போலீஸ் தாக்குதல் நடத்தி உள்ளது. மக்களை கொன்ற இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? இது இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள். ஆரோக்கியமான, அமைதியான சுற்றுப்புறச்சூழலுக்கு போராடியது ஒரு மிகப்பெரிய குற்றமா? ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

 மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு பயங்கரவாதத்திற்கு இணையாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போது மக்கள் எங்கு செல்வார்கள்?  
இந்த படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள் மற்றும் காரணமானவர்களை கொடூரமாக தண்டிக்க வேண்டும். இந்த படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன், நீதி கோருகிறேன். இவ்விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்தும் பதில்கள் வராத நிலையில் ஏராளமான கேள்விகள் எழுகிறது. பிரதமர் மோடி அவர்களே இப்போது நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் பேசவில்லை. 

தூத்துக்குடியில் இரக்கமற்ற முறையில் மக்கள் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை. தானியங்கி துப்பாக்கி மூலம்  அப்பாவி மக்களை கொல்ல யார் உத்தரவிட்டது? காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள்! இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் தோரணைப் பேச்சை இப்போது நாங்கள் கேட்க முடியுமா? என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story