சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து அரசு பங்களாவை காலி செய்தார் அகிலேஷ் யாதவ்


சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து அரசு பங்களாவை காலி செய்தார் அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 31 May 2018 1:15 PM GMT (Updated: 31 May 2018 1:15 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அரசு பங்களாவை காலி செய்தனர். #AkhileshyadavVacateBungalow

உத்தரபிரதேசம்,

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் அரசு பங்களாவை காலி செய்ய மறுப்பு  தெரிவித்து வந்தனர். பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு இருவரும் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இருவரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்நிலையில் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இருவரையும் அரசு பங்களாவை விட்டு காலி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தாங்கள் வசிக்கும் அரசு பங்களாவை இன்று காலி செய்தனர். முன்னதாக முன்னாள் முதல்வர் மாயாவதி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story