துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி


துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு  ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 5 Jun 2018 10:41 AM GMT (Updated: 5 Jun 2018 10:43 AM GMT)

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting

சென்னை, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story