மந்திரி பதவி கிடைக்காததால் போர்க்கொடி கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை


மந்திரி பதவி கிடைக்காததால் போர்க்கொடி கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 7 Jun 2018 10:21 PM GMT (Updated: 7 Jun 2018 10:21 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். கட்சிக்காகவும், லிங்காயத் சமூகத்திற்காகவும் பாடுபட்ட தன்னை, கட்சி புறக்கணித்துவிட்டதாக எம்.பி.பட்டீல் கூறினார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சதீஸ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ், ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் கருத்துகளை கேட்டு அறிந்தார். காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் அங்கு வந்து எம்.பி.பட்டீலை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய எம்.பி.பட்டீல், “எனக்கு மந்திரி பதவி கிடைக்காதது மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது வாய்ப்பு கிடைக்காதது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு சுயமரியாதை உள்ளது. நான் இனி பதவி தாருங்கள் என்று கேட்கமாட்டேன்” என்றார்.

நடத்திய விதம் சரியல்ல

அதேபோல் அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் தலைமையில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.பட்டீல் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “கட்சியில் என்னை போன்ற மூத்த தலைவர்களை நடத்திய விதம் சரியல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இதுதொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். அந்த திசையில் நாங்கள் சில முடிவுகளை எடுப்போம். செயல்பாடுகள் உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். நான் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை” என்றார்.

மீண்டும் விரிவாக்கம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று அதிருப்தியாளர்களை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்யும்போது, எம்.பி.பட்டீல், ஆனந்த்சிங் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். மற்ற அதிருப்தியாளர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் தற்போது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story