ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபர் ஜின்பிங்கை மோடி நாளை சந்தித்து பேசுகிறார்


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபர் ஜின்பிங்கை மோடி நாளை சந்தித்து பேசுகிறார்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 10:23 PM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி, 

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு

மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நாளை மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மேலும் நாளை அவர் ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசுகிறார்.

சீனாவில் உள்ள வூஹன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மோடியும், ஜின்பிங்கும் சாதாரண முறையில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன்பிறகு இப்போது அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

தலைவர்கள்

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Next Story