சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் மரணம்: சென்னை வாலிபரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு


சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் மரணம்: சென்னை வாலிபரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 11:45 PM GMT (Updated: 8 Jun 2018 10:17 PM GMT)

சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் இறந்த சென்னை வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீகாளஹஸ்தி, 

திருப்பதியைச் சேர்ந்த பாஸ்கர்-அனுராதா தம்பதியினர் ஒரு மோட்டார் சைக்கிளில் சத்தியவேடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். சத்தியவேடு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நின்றிருந்த 5 மோட்டார் சைக்கிளில் வந்த 12 வாலிபர்களில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, அனுராதா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் 9 வாலிபர்களை மடக்கிப்பிடித்து, சத்தியவேடு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ராஜி (வயது 24), பிரசாந்த் (20), அபினேஷ் (21), வினோத்குமார் (21), மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (21), கோரிமேடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (21), போரூரை சேர்ந்த ஜான்சார்லஸ் (21) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது ராஜி போலீஸ் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

பிடிபட்ட 8 பேரும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ராஜின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story