மும்பை மற்றும் மங்களூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை


மும்பை மற்றும் மங்களூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை
x
தினத்தந்தி 9 Jun 2018 7:09 AM GMT (Updated: 9 Jun 2018 7:09 AM GMT)

மும்பை மற்றும் மங்களூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பருவமழைக்காலம் ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 10-ந் தேதி பருவமழை தொடங்குவது வழக்கம். சில நேரங்களில் தாமதமாகவும் பருவமழை தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  கடந்த சில நாட்களாக மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட இடங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. மும்பை நகரில் நேற்று முந்தினம் பெய்த மழைக்கே பல சாலைகளில் வெள்ளம் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்தநிலையில், இன்று மும்பை மற்றும் மங்களூரில் கன மழை பெய்து வருகிறது.  மங்களூரில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மும்பையில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டு உள்ளது.

இதேபோல தீயணைப்பு துறையின் வெள்ள மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ், போக்குவரத்து போலீஸ், கல்வித்துறை அதிகாரிகள், பெஸ்ட் அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். வெள்ள நீரை மோட்டார்பம்புகள் மூலம் துரிதமாக வெளியேற்றுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இன்று முதல்  வருகிற 11-ந்தேதி வரை 3 நாட்கள் ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story