நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம்


நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:30 PM GMT (Updated: 13 Jun 2018 10:08 PM GMT)

நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

புதுடெல்லி,

நமது நாட்டில் 5 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.

இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

* அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

* அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

* மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

* டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

* வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

* வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

* எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.


Next Story