பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பகுதிகளில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீர் பகுதிகளில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. #KashmirTrainSuspended
ஸ்ரீ நகர்,
காஷ்மீர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலரால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்கி வரும் ரெயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வடக்கு காஷ்மீர் பகுதியில் ஸ்ரீ நகர், பட்காம், பாரமுல்லா ஆகிய பகுதிக்கு செல்லும் ரெயில்கள் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களின் சேவையும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரெயில் சொத்துகளை பாதுகாக்கும் விதமாக போலீசாரின் அறிவுறுத்தலின் படி, காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு தாக்குதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சம்பவங்களில் ரெயில் சொத்துகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட காரணங்களுக்காகவே தற்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.
காஷ்மீரில் நடக்கும் தொடர் தாக்குதல் சம்பவங்களினால் கடந்த மாதம் மட்டும் சுமார் 14 முறை ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story