ராஜஸ்தானில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க முடிவு


ராஜஸ்தானில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க முடிவு
x
தினத்தந்தி 2 July 2018 4:11 PM GMT (Updated: 2 July 2018 4:11 PM GMT)

ராஜஸ்தானில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தேமி கலான் பகுதியில் அன்னபூர்ணா பால் விநியோக திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இத்திட்டத்தின்படி, அரசு பள்ளி கூடங்கள் மற்றும் மதரசாக்களில் படித்து வரும் 62 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வாரம் 3 முறை பால் வழங்கப்படும்.

இதுபற்றி வசுந்தரா கூறும்பொழுது, நானும் ஒரு தாய்.  குழந்தைகள் வளர்ந்து, ஆரோக்கியமுடன் உள்ள நிலையில் அதனை காண்பதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இந்த திட்டம் ரூ.218 கோடி பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.  இதற்காக 5 லட்சம் லிட்டர் பால் பள்ளி கூடங்களுக்கு வழங்கப்படும்.  காலை இறை வணக்கத்திற்கு பின் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 150 மி.லிட்டர் பாலும், 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 200 மி.லிட்டர் பாலும் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் திறமையான வகையில் அமல்படுத்தப்படுகிறது என்பதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்று வசுந்தரா தெரிவித்துள்ளார்.


Next Story