நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: 11 நாளில் அதிரடி தீர்ப்பு


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: 11 நாளில் அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:45 PM GMT (Updated: 8 July 2018 11:34 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர் சாமி (வயது 75). இவருடைய மனைவி புட்டம்மா (63). புட்டம்மாவின் நடத்தையில் பரமேஸ்வர் சாமிக்கு சந்தேகம் ஏற்பட்டு புட்டம்மாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி பரமேஸ்வர் சாமி புட்டம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் தூங்கி கொண்டு இருந்த புட்டம்மாவின் தலையில் கல்லைப்போட்டு பரமேஸ்வர் சாமி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பரமேஸ்வர் சாமியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி வஸ்த்ராமட் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். பரமேஸ்வர் சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாகவும் விதித்தார். புட்டம்மா கொலை செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில் இந்த வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story