நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்


நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 9 July 2018 9:08 AM GMT (Updated: 9 July 2018 9:08 AM GMT)

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உள்ளது. #NirbhayaVerdict

புதுடெல்லி
 
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளாக்கியவர்களுக்கு எதிரான வழக்கு கடந்து வந்த பாதை

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16--ம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.  டிசம்பர், 29 ஆம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சியில் உறையவைத்தது.

இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் தான் குற்றவாளிகள் என போலீஸார் கண்டறிந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து, ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

2013 ஜனவரி 2 ஆம் தேதி டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன் வழக்கின் விசாரணை தொடங்கியது.

வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிர்பயா வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

நிர்பயா வன்கொடுமை தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனினும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேரும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம்  கோர்ட்டில்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், மரண தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி, 4 பேரும் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்   நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் அமர்வு. மரண தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி, 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

Next Story