பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடவுள் என்று நினைப்பா? - ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி


பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கடவுள் என்று நினைப்பா? - ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:42 PM GMT)

பெட்ரோலிய அமைச்சகம் என்ன கடவுளா? எங்களை வேலை இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டார்களா? என்று சுப்ரீம் கோர்ட்டு காட்டமாக கேள்வி விடுத்தது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக்கோரி, எம்.சி.மேத்தா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், கடந்த 1985-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொழிற்சாலை எரிபொருளாக பயன்படுத்தப்படும் ‘பெட் கோக்’ இறக்குமதிக்கு தடை விதித்தது பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டு இருந்தது.

மேலும், டெல்லி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு காலவரையறை நிர்ணயித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, பெட் கோக் இறக்குமதிக்கு தடை விதித்த விவகாரம் பற்றி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று (அதாவது, நேற்றுமுன்தினம்)தான் தங்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

அதைக்கேட்ட நீதிபதிகள், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தை கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் கூறியதாவது:-

பெட்ரோலிய அமைச்சகம் என்ன கடவுளா? அவர்கள் என்ன சூப்பர் அரசா? இந்திய அரசை விட உயர்ந்தவர்களா? அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போதுதான் பதில் சொல்வார்களா? பெட்ரோலிய அமைச்சகத்தின் பெயரை ‘கடவுள்’ என்று மாற்றி வைத்துக்கொள்ள சொல்லுங்கள். எங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படிய மாட்டார்களா? கீழ்ப்படிய விரும்பாவிட்டால், அப்படியே இருக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வேலை இல்லாதவர்கள், தங்களுக்கு இன்னும் கால அவகாசம் அளிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களின் கருணையில்தான் நாங்கள் இருக்கிறோமா?

அவர்களின் செயல்பாடு எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வழக்கின் தாமதத்துக்கு அவர்களின் மெத்தனம்தான் காரணம். அதனால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.

இத்தொகையை 13-ந் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையத்தில் செலுத்த தவறினால், அபராத தொகை அதிகரிக்கப்படும். அதுபோல், நாங்கள் உத்தரவிட்டபடி, டெல்லி அரசு, நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதன் வக்கீலும் ஆஜராகவில்லை. ஆகவே, டெல்லி அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அடுத்தகட்ட விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story