மகன் தீவிரவாதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கி உள்ளான் என்பதை அறிந்த தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதியான மகன் சிக்கியது பற்றி அறிந்த தந்தை மாரடைப்பில் உயிரிழந்து உள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் தெற்கே சோபியான் மாவட்டத்தில் குண்டல்லான் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலையில் இருந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வந்தது. இந்த மோதலில் தீவிரவாதி ஜீனத் அகமது நைகூ என்பவரும் ஈடுபட்டு உள்ளார். பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகள் படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
ஜீனத்தின் தந்தை ஈசாக் நைகூ தனது மகன் தீவிரவாதி என்றும் பாதுகாப்பு படையினருடனான மோதலில் சிக்கி கொண்டுள்ளான் என்பதனை அறிந்துள்ளார். இதனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து அவரை உடனடியாக சோபியான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.