மராட்டிய மாநிலத்தில் மழைக்கு 7 பேர் சாவு


மராட்டிய மாநிலத்தில் மழைக்கு 7 பேர் சாவு
x
தினத்தந்தி 10 July 2018 11:45 PM GMT (Updated: 11 July 2018 12:03 AM GMT)

அடைமழை கொட்டுவதால் 5–வது நாளாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ரெயில்களில் இருந்து 2 ஆயிரம் பயணிகள் மீட்கப்பட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மழைக்கு 7 பேர் இறந்தனர்.

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக மழை கொட்டுகிறது. கனமழையால் மும்பை பெருநகரம் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்பட பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 66 பேர் சிக்கி இருந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

சாலைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நேற்றும் சாலை, ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை– ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கியது.

மின்சார ரெயில் சேவை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 100–க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே பல நீண்டதூர ரெயில் சேவைகளை ரத்து செய்தன. சில ரெயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன.

மோசமான வானிலை காரணமாக 407 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று மும்பையை புயல் தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த மும்பை மாநகராட்சி, இதுபோன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் 2005–ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை போல மீண்டும் ஒரு பாதிப்பை மும்பை பெருநகரம் சந்திக்குமோ என்ற அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கனமழை காரணமாக நல்லசோப்ரா–வசாய் ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் சதாப்தி, வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிக்கி கொண்டன. இதனால் இரு ரெயில்களிலும் இருந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று படகுகள் மூலம் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோல் பால்கர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தில் மழைக்கு யவத்மால் மாவட்டத்தில் 4 பேரும், தானே, பால்கர் மாவட்டத்தில் தலா ஒருவரும், மும்பை பெருநகரில் ஒருவரும் இறந்தனர். மாநிலம் முழுவதும் மழைக்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.


Next Story