முல்லைபெரியாறு வாகன நிறுத்தம் தொடர்பான வழக்கில் 20-ந்தேதி விசாரணை


முல்லைபெரியாறு வாகன நிறுத்தம் தொடர்பான வழக்கில் 20-ந்தேதி விசாரணை
x
தினத்தந்தி 11 July 2018 12:00 AM GMT (Updated: 11 July 2018 12:09 AM GMT)

முல்லைபெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது.

புதுடெல்லி,

முல்லைபெரியாறில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பான மேல்முறையீடு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்று 20-ந் தேதி விசாரிப்பதாக ஒப்புதல் அளித்தனர்.

முல்லைபெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. வாகன நிறுத்தம் போன்ற நிரந்தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

கேரளாவின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 72 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது வன பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது.

இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷண் அமர்வில் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் உமாபதி முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 20-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.

Next Story