கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று குழந்தைகளை ‘பேஸ்மெண்டில்’ பூட்டிவைத்த பள்ளி நிர்வாகம்


கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று குழந்தைகளை ‘பேஸ்மெண்டில்’ பூட்டிவைத்த பள்ளி நிர்வாகம்
x
தினத்தந்தி 11 July 2018 8:54 AM GMT (Updated: 11 July 2018 8:54 AM GMT)

டெல்லியில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று குழந்தைகளை பள்ளி நிர்வாகம் பேஸ்மெண்டில் பூட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் ஹவுஸ் காசி பகுதியில் ராபியா பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகம் ‘பிளே ஸ்கூல்’ குழந்தைகளை, கட்டணம் செலுத்தைவில்லை என்று கூறி கட்டிடத்தின் பேஸ்மெண்டில் பூட்டிவைத்துள்ளது. 55 குழந்தைகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் இவ்வாறு பள்ளி நிர்வாகம் செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. குழந்தைகள் நெழிந்துக்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல் அறைக்குள் சுற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அறையில் ஜன்னல்கள் கிடையாது என்றும், மோசமான நிலையில் காற்றாடி ஒன்று சுற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பில் பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பேஸ்பெண்டில் காற்று கிடையாது, குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

பெற்றோர்கள் பேசுகையில், “குழந்தைகள் காலை 7 மணியிலிருந்து பேஸ்மெண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக பள்ளியில் பணியாற்றுபவர் தகவல் தெரிவித்தார். பேஸ்மெண்டின் அறைக்கதவு வெளிப்பகுதியில் பூட்டப்பட்டு இருந்தது. நாங்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது, குழந்தைகள் தரையில் அமர்ந்து இருந்தார்கள். அந்த அறை மிகவும் வெப்பமாக காணப்பட்டது, அங்கு ஒழுங்காக செயல்படாத இரண்டு காற்றாடிகள் மட்டும் சுற்றியது. அதிகமான குழந்தைகள் பசியுடனும், தாகத்துடனும் இருந்தார்கள்,” என குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜியா உத்தின் என்பவர் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போதுதான், குழந்தைகள் தண்டனையாக பேஸ்மெண்டில் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பேசுகையில், “நான் அறைக்கு சென்றதும் பிற குழந்தைகளையும் கண்டேன், இது மிகவும் கொடூரமானது. அங்கு அதிகமான வெப்பம் இருந்தது. குழந்தைகள் வேர்வையில் நனைந்து இருந்தார்கள்,” என்று கூறியுள்ளார். பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி நிர்வாகம் மறுப்பு

ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் பராக் திபா பேசுகையில், “பேஸ்மெண்டில் குழந்தைகள் விளையாடதான் செய்தார்கள், அங்கு இரு ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் வழக்கமாக அங்கு தரையில்தான் இருப்பார்கள். குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது,” என தெரிவித்துள்ளார். 

Next Story