தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் - மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்


தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் - மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 11 July 2018 10:13 PM GMT (Updated: 11 July 2018 10:13 PM GMT)

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது

புதுடெல்லி,

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் அண்மைக்காலமாக ஏராளமான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருவதால் அதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டு வெள்ளை பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்ட தாஜ்மகால் தற்போது செம்பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டது.

இதையடுத்து தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேச அரசு இது தொடர்பாக தொலைநோக்கு வரைவு திட்டம் ஒன்றை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி கூறுகையில், கான்பூர் ஐ.ஐ.டி. தாஜ்மகால் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து மதிப்பீடு செய்து வருகிறது. அது தனது அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்யும். இது தொடர்பாக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடும் கண்டனம் தெரிவித்து கூறியதாவது:-

தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மகாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை மூடிவிடலாம் அல்லது நீங்கள் விரும்பினால் தாஜ்மகாலை இடித்துவிடலாம்.

தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய அரசு சோம்பேறித்தனமாக செயல்படுகிறது. தாஜ்மகாலின் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை அளித்த பிறகும் கூட அதை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் உத்தரபிரதேச அரசு தொலைநோக்கு திட்டம் எதையும் தயாரிக்கவில்லை. இதுபோன்ற அக்கறையின்மையால் தாஜ்மகாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குரியதாகி விட்டது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Next Story