மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது - மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி


மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது - மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 11 July 2018 11:15 PM GMT (Updated: 11 July 2018 10:23 PM GMT)

மராட்டிய மாநிலம் நாலச்சோப்ராவில் மழை நின்ற பிறகும் தண்டவாளங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது.

மும்பை,

மும்பையில் 5 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை நின்று நேற்று சூரியன் தலைகாட்டியது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களை திணறடித்து விட்டது. நகர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

நீர் ஆதாரங்களான ஏரிகள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மும்பை பெருநகரத்துக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான துல்சி நிரம்பியது. சில அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. மும்பை, தானே, பால்கர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் மற்றும் நீண்டதூர ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. விமான போக்குவரத்தும் தாமதமானது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மழைக்கு உயிர் பலிகளும் ஏற்பட்டன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று காலையில் மழை முழுமையாக நின்றது. இதையடுத்து, மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. 5 நாட்களுக்கு பின் சூரியனின் வெளிச்சத்தை மும்பை மக்கள் பார்த்தனர். மழை நின்றதை தொடர்ந்து, சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. வாகன போக்குவரத்தும் சீரானது.

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்ததை அடுத்து ரெயில் போக்குவரத்து சீரடைய தொடங்கியது. சில இடங்களில் ரெயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன. கனமழை வெள்ளத்தின் காரணமாக பால்கர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசாய், விரார் பகுதிகளில் குடியிருப்புகளையும், சாலைகளையும் சூழ்ந்த வெள்ளம் வடியாமல் தேங்கியே நிற்கிறது.

மழை நின்றாலும் அந்த பகுதிகள் தொடர்ந்து வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கின்றன. அந்த பகுதி மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. வெள்ளம் சூழ்ந்த விரார்- வசாய் நகரங்களில் மின்வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மும்பையை பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் 86 செ.மீ. மழை பெய்து இருப்பதாகவும், இது சராசரியாக ஒரு மாத காலத்தில் பெய்யும் மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மழை நின்ற போதிலும் மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story