ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்கப்படும்


ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்கப்படும்
x
தினத்தந்தி 13 July 2018 11:30 PM GMT (Updated: 13 July 2018 10:31 PM GMT)

ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்கப்படும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், 400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘ரஷியாவிடம் இருந்து ரூ.39 ஆயிரம் கோடிக்கு 5 எஸ்.400 டிரம்ப் ரக அதி நவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இது நிறைவடைந்து விட்டால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகளுக்குள் இந்த ரக ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படும்’’ என்றார்.

ரஷியா உடன் செய்துகொள்ளும் ராணுவ ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா தடை(காட்சா) விதித்து உள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘அமெரிக்காவா, ரஷியாவா... எதை தேர்வு செய்வது என்பது குறித்து நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. அதேநேரம் ரஷியாவுடன் நாம் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பைக் கொண்டு இருக்கிறோம். காட்சா என்பது அமெரிக்காவின் சட்டம். இந்த பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளும் கருத்தில்கொண்டு உள்ளனர்’’ என்றார்.

மேலும் அமெரிக்கா விதித்துள்ள தடை அந்நாட்டின் சட்டம். அது ஐ.நா. கொண்டு வந்தது, அல்ல. இந்த சட்டம் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கள நிலவரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது அல்ல. இது வேறு எங்கிருந்தோ, யாராலோ தயாரிக்கப்பட்டது. காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:–

அண்மையில் முஸ்லிம் மத குருக்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சி என்று கூறி இருக்கிறார். இது 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டை மத ரீதியாக பிளவு படுத்துவதற்குரிய திட்டம். ஒரு கட்சிக்கு தலைவர் என்கிற முறையில் ராகுல்காந்தி தெளிவாக பேசவேண்டும். காங்கிரசை முஸ்லிம் கட்சி என்று கூறியதன் அர்த்தம் என்ன என்பதற்கு அவர் விளக்கம் அளிக்கவேண்டும்.

மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமாக விளையாட்டை விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக் கலவரம் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சமுதாய ஒற்றுமைக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு.

நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறதா? அல்லது மோடி மீதுள்ள வெறுப்பின் காரணமாக அவரை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்று சொல்கிறதா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story