4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலை நிர்ணயிக்க வேண்டும்
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்று மாசுபாடு குறித்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
புதுடெல்லி,
நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டீசலில் ஓடும் வாகனங்கள் வெளியேற்றும் மாசு, கவலைக்குரியதாக இருப்பதாக சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது என்று கோர்ட்டுக்கு ஆலோசகராக செயல்படும் வக்கீல் அபராஜிதா சிங் கூறினார். எரிபொருள் சிக்கனத்துக்காக பலர் டீசல் வாகனங்களையே நாடுவதாக அவர் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், அரசியல் சட்டத்தின் 14–வது பிரிவு, அனைவரும் சமம் என்று கூறுகிறது. எனவே, 4 சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களுக்கு பெட்ரோலுக்கும், டீசலுக்கும் சமமான விலையை நிர்ணயிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். இதுபற்றிய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை 23–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.