காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு ஐ-போன்


காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு ஐ-போன்
x
தினத்தந்தி 17 July 2018 3:13 PM GMT (Updated: 17 July 2018 3:13 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு பரிசு வழங்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.


பெங்களூரு, 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகம், நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. பாராளுமன்றம் தொடங்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாளை டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐ–போன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் வைக்கும் வகையில் விலை உயர்ந்த பேக் வழங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் நாளை(இன்று) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே  என்னுடைய சொந்த செலவில் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். வழங்கப்பட்ட செல்போனை பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருப்பதாக எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அத்துடன் ரூ.1 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு ‘ஐ போன்‘ அதாவது செல்போனை அனுப்பி இருக்கிறீர்கள். 

அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இது சரியா?. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். அந்த போனை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story