விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள்


விராட் கோலி  தலைமையிலான இந்திய அணியை சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Aug 2018 8:47 AM GMT (Updated: 4 Aug 2018 8:47 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார். #VijayMallya

லண்டன், 

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனிடையே விராட் கோலி மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணி வீரர்களை இந்த மாதத்தில் சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. இந்திய அணியை விஜய் மல்லையா சந்தித்தால் ஏற்படும் பெரும் சர்ச்சையை தவிர்க்கவே கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே கடந்த வாரம் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் புகைப்படம் ஒன்று வெளியானது. அப்புகைப்படத்தில் பல ரசிகர்கள் முன்னிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி நின்று போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரசிகர்களில் ஒருவர் விஜய் மல்லையா போன்ற தோற்றம் பெற்றிருப்பதாக புகைப்படத்தை பார்த்தவர்கள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டனர். பலர் அவர் விஜய் மல்லையா தான் எனக்கூறி வந்தனர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னே விஜய் மல்லையா, இந்திய அணி வீரர்களை காண வேண்டுகோள் விடுத்திருப்பது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story