பீகாரை போன்று உ.பியிலும் காப்பகத்தில் 18 சிறுமிகள் மாயம் 24 பேர் மீட்பு
பீகாரை போன்று உ.பியிலும் ஒரு காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். 24 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
தியோரியா (உத்தரபிரதேசம்)
தியோரியா நகரில் நேற்று போலீசார் ஒரு காப்பகத்தில் சோதனை நடத்தி அந்த காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகளை மீட்டனர். அந்த காப்பகத்தில் மேலாளர்களாக செயல்பட்ட கணவன்-மனைவி இருவரை கைது செய்து உள்ளனர். அங்கு சிபிஐ ஆய்வுக்கு பின் அந்த காப்பகத்தின் உரிமம் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஒரு சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த போது. போலீசார் அந்த காப்பகத்தில் சிறுமிகள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விசாரித்து உள்ளனர்.
16 வயது பெண் ஒருவர் போலீஸ் நிலையம் சென்று தாங்கள் கொடுமை படுத்தப்படுவதாகவும். தினமும் காரில் வரும் ஒவ்வொருவருடன் தங்களை கட்டாயமாக அனுப்பி வைப்பதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கன்ய் கூறியதாவது;-
விடுதியில் போலீசார் சோதனை நடத்தி 24 சிறுமிகளை மீட்டனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் காஞ்சன் லதா, கிரிஜா திரிபாதி மற்றும் மோகன் திரிபாதி இவர்கள் 3 பேரும் காப்பகத்தை நடத்தி வந்து உள்ளனர்.
ஆவணங்களை சரிபார்த்த போது பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 18 சிறுமிகள் காணாமல் போய் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் மாயமான சிறுமிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மீட்கப்பட்ட சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்களா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story