மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் எந்தஒரு பிரச்சனையும் இல்லை -தேவேகவுடா


மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் எந்தஒரு பிரச்சனையும் இல்லை -தேவேகவுடா
x
தினத்தந்தி 6 Aug 2018 9:33 AM GMT (Updated: 6 Aug 2018 9:33 AM GMT)

மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் எந்தஒரு பிரச்சனையும் கிடையாது என தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை அறிவிப்பதில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு எந்தஒரு பிரச்சனையும் கிடையாது என தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேகவுடா, “தேவையில்லாத குழப்பங்களை உருவாக்க முயற்சி செய்யாதீர்கள். இங்கு காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி ஆட்சியில் உள்ளோம். முதலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என காங்கிரஸ் கூறியது. பிஐடி சிறப்பு செய்தியாளர் பேசுகையில், காங்கிரஸ் மம்தா பானர்ஜி அல்லது மாயாவதியை பெண் வேட்பாளராக முன்மொழியும் என கூறினார். அதற்கு எங்களுக்கு எந்தஒரு பிரச்சனையும் இல்லை என்று நான் கூறினேன்,” என தேவேகவுடா கூறியுள்ளார். 

சில வாரங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில்,, “வழக்கமாக எங்களுடைய தலைவரையே வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திப்போம், அதேபோன்று எங்களுடைய கட்சியின் தலைவரையே முன்நிறுத்தி தேர்தலை சந்திப்போம்,” என்றார். 

அசாம் என்ஆர்சி விவகாரம் தொடர்பாக பேசிய தேவேகவுடா, “இப்பிரச்சனை இன்று நடப்பது கிடையாது. நான் பிரதமராக இருக்கும் போதே இப்பிரச்சனை இருக்கிறது. இப்போது 40 லட்சம் பேரது நிலை சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. பா.ஜனதா 4 ஆண்டுகால ஆட்சியை முடித்துவிட்டது, இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள்? இப்போது தேர்தல்கள் நெருங்குகிறது. அவர்களை வெளியேற்றுவதால் யாருடைய  நன்மை என்று நீங்கள் காட்ட விரும்புகிறீர்கள்? நீங்கள் பிறரை தேவையில்லாமல் குற்றம் சாட்டுவது ஏன்? இப்பிரச்சனை 1971-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது,” என கூறியுள்ளார். 

Next Story