சத்தீஷ்கர்: என்கவுண்டரில் பலியான நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு


சத்தீஷ்கர்: என்கவுண்டரில் பலியான நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:02 AM GMT (Updated: 6 Aug 2018 11:02 AM GMT)

சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ராய்பூர், 

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமான சத்தீஷ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் தெற்கு  பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் , மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு இரண்டு திசைகளில் அனுப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு குழு, நல்கடோங் என்ற கிராமம் அருகே, மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து முகாமை, நக்சல் தடுப்பு குழு போலீசார் சுற்றி வளைத்தனர். மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், 15 மாவோயிஸ்டுகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். 16 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.  

மேலும், அந்த பகுதி குழு உறுப்பினராக செயல்பட்ட ஒருவரும், பெண் மாவோயிஸ்டு ஒருவரும் குண்டு காயங்களுடன் கைது செய்யப்பட்டனர். சுட்டுக்கொலை செய்யப்பட்ட 15 மாவோயிஸ்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ரோந்துக்குழு ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மட்டும் 86 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவோயிஸ்டு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி தெரிவித்தார். 


Next Story