கேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு


கேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு
x
தினத்தந்தி 9 Aug 2018 11:45 AM GMT (Updated: 9 Aug 2018 11:45 AM GMT)

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து உள்ளது

திருவனந்தபுரம்,

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

அதே போல் மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூரில் 2 பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டுள்ளது என்று கேரள முதல்-மந்திரி  பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 92 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது, கோழிக்கோட்டில் 20 மில்லிமீட்டரும் திருவனந்தபுரத்தில் 14 மில்லிமீட்டருரும், கர்வரில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

கேரள முழுவதும் மழையால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

உதவி எண்கள்

Thiruvananthapuram - 0471 2730045

Kollam - 0474 2794002

Pathanamthitta - 0468 2322515 

Alappuzha - 04772 238630

Kottayam - 0481 2562201

Idukki - 04862 233111

Ernakulam - 0484 2423513

Thrissur - 0487 2362424

Palakkad - 0491 2505309

Malappuram - 0483 2736320

Kozhikode - 0495 2371002

Wayanad - 9207985027

Kannur - 0497 2700645

Kasargode - 0499 4257700

Next Story