ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் குழு நேரில் மனு


ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் குழு நேரில் மனு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:15 PM GMT (Updated: 9 Aug 2018 10:15 PM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் குழு நேரில் மனு அளித்து உள்ளனர்.

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பெயர்கள் அடங்கிய வரைவு தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறாதது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தது. அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தது. அதில், ‘‘அசாமில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் பிற மாநிலத்தவரான 40 லட்சம் இந்தியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஜனநாயகத்தின் 4 தூண்களையும் அழிக்க அரசு முயற்சிக்கிறது. ஆகவே, ஜனநாயகத்தின் 4 தூண்களின் பாதுகாவலரான தாங்கள் தலையிட்டு, ஒரு இந்தியர் கூட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த குழுவில், தேவே கவுடா (ஜனதாதளம் எஸ்), ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), சுதீப் பந்தோபாத்யாயா (திரிணாமுல் காங்கிரஸ்), முகமது சலீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஒய்.எஸ்.சவுத்ரி (தெலுங்கு தேசம்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி) உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர்.


Next Story