27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் கமிஷன் டெல்லியில் வருகிற 27–ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது.
புதுடெல்லி,
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 17 எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதால் இதுகுறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கமிஷன் கட்சிகளை சந்திப்பது வழக்கமானது தான்.
இதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை மட்டுமின்றி விளம்பரங்கள், நடத்தை விதிமுறைகளை மீறுவது, அவதூறான பேச்சுகள் ஆகியவை பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என தகவல் தரும் எந்திரங்கள் வாங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கட்சிகளுக்கு விளக்கப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.