ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி


ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 Aug 2018 12:17 PM GMT (Updated: 10 Aug 2018 12:17 PM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #Rafaledeal

ராய்பூர்,

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் இறுதி செய்துள்ளன. 
இதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இது போபர்ஸ் ஊழலை விட மிகப்பெரியது என முன்னாள் பா.ஜனதா மத்திய மந்திரிகளான யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோரும் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் இப்பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் எழுப்பினார். ஆனால் பிரதமர் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தை காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் எழுப்பி வருகிறது. இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டினார். 

ராய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைமையிலான அரசே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. அதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ. 540 கோடி என பேசப்பட்டது. அதுதொடர்பாக முடிவு எடுப்பது மட்டும்தான் மோடியுடைய வேலையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று பழைய ஒப்பந்தத்தை சிதைத்துவிட்டார், பிற அமைச்சர்களுக்கு இது தெரியாது, விமானத்தின் விலையும் ரூ. 1600 கோடியாக உயர்ந்துவிட்டது என்றார். இவ்விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதையும் விமர்சனம் செய்தார். 


Next Story