போராட்டங்களில் வன்முறை, மத்திய அரசு சட்ட திருத்தம் செய்யும் வரை காத்திருக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


போராட்டங்களில் வன்முறை, மத்திய அரசு சட்ட திருத்தம் செய்யும் வரை காத்திருக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 10 Aug 2018 3:31 PM GMT (Updated: 10 Aug 2018 3:31 PM GMT)

போராட்டங்களில் வன்முறை விவகாரத்தில் அரசின் சட்டத்திருத்தத்துக்காக காத்திருக்க போவதில்லை, இதற்கான விதிமுறைகளை கோர்ட்டே வலுப்படுத்தும் என்ற ரீதியில் காட்டமாக தெரிவித்துள்ளது.


புதுடெல்லி, 

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டு தனியார், அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டால், அதற்கு அந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த இயக்கங்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று கடந்த 2009–ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. மேலும் போராட்டத்தின் போது நடைபெறும் வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய அந்த சம்பவங்களை போலீசார் வீடியோ படமாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பத்மாவதி படம் வெளியிட்ட போது வன்முறை நேரிட்டது. இதுதொடர்பாக சினிமா சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2009–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரணையின் போது, சமீபத்தில் நடைபெற்றா கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பியபோது சுப்ரீம் கோர்ட்டு அரசின் சட்டத்திருத்தத்துக்காக காத்திருக்கப் போவதில்லை இதற்கான விதிமுறைகளை கோர்ட்டே வலுப்படுத்தும் என்ற ரீதியில் பதிலளித்தது.

பத்மாவதி படத்தின் நடிகையின் மூக்கை வெட்டி விடுவோம் என அச்சுறுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியை எழுப்பியது. 

வன்முறை, கலவரங்கள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட பகுதியின் போலீஸ் சூப்பிரண்டு போன்ற போலீஸ் அதிகாரிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.  வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வருவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் நடப்பது மிகவும் மோசமானது என்றும், அது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், அரசு சட்ட திருத்தம் கொண்டு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும் கூறி வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. 

Next Story