தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: அமித்ஷா தாக்கு


தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: அமித்ஷா தாக்கு
x
தினத்தந்தி 11 Aug 2018 11:30 PM GMT (Updated: 11 Aug 2018 10:45 PM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா,

அசாமில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அசாம் உடன்படிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்து போடப்பட்டது. அப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மேற்கு வங்காளத்தில் முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சியினருக்கு வங்கதேச ஊடுருவல்காரர்கள் வாக்கு வங்கியாக இருந்தனர். தற்போது அவர்கள் திரிணாமுல் காங்கிரசாரின் வாக்கு வங்கியாக மாறிவிட்டனர்.

எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. நாட்டின் பாதுகாப்பை விட வாக்கு வங்கிதான் முக்கியமா? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பதிவேடு மூலம் வெளிநாட்டு அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் என கூறப்படுவது தவறு. இதன் மூலம் அகதிகளுக்கு எதுவும் நேரிடாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அகதிகளுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்காகவே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை (திருத்தம்) மசோதாவை கொண்டு வந்தது.

இங்கு, ‘வங்காளத்துக்கு எதிரான பா.ஜனதாவே வங்காளத்தை விட்டு வெளியேறு’ என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒருபோதும் எதிரி அல்ல. மாநிலத்தை தவறாக ஆட்சி செய்யும் மம்தாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும்தான் எதிரி.

எனது உரையை மக்கள் கேட்காமல் இருக்க மாநில அரசு பல இடங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆனால் பா.ஜனதா தொண்டர்களே எனது உரையை மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு சேர்ப்பார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திலிப் கோஷ், பாபுல் சுப்ரியோ, பூனம் மகாஜன் உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ததாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பா.ஜனதாவின் மற்றுமொரு தோல்வி நிகழ்ச்சி என வர்ணித்துள்ள அந்த கட்சி, அதை மறைக்கவே போலி காரணங்களை அமித்ஷா கூறுவதாக டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.


Next Story