கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்


கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Aug 2018 2:33 AM GMT (Updated: 16 Aug 2018 2:33 AM GMT)

கனமழையால் கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தற்போது வரை மழைக்கு 67 பேர் பலியாகியுள்ளனர். #KeralaFloods

கொச்சி,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

கடந்த 5 நாட்களில் மட்டும் 47 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலமே மழையின் காரணமாக சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தையும் கேரள அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த  24 மணிநேரத்துக்கு கேரளாவில் மிக, மிக கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்று நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.   இதனால், மழையின் தாக்கமும், வெள்ளத்தின் தாக்கமும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

மழைத்தொடர்பான சம்பவங்களால் கேரளாவில் தற்போது வரை 67 பேர் பலியாகியுள்ளனர். 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ள நிலையில், கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை இருகாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் ரயில் போக்குவரத்து, பேருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story