“கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர், வாஜ்பாய்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்


“கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர், வாஜ்பாய்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:00 PM GMT (Updated: 17 Aug 2018 9:01 PM GMT)

டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், “கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர், வாஜ்பாய்” என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

புதுடெல்லி,

மறைந்த பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் ஆகியோர் சென்றனர்.

டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவென்பது இந்திய தேசத்திற்கே ஒரு மாபெரும் இழப்பாக அமைந்திருக்கிறது. ஒரு மாபெரும் தலைவராக, குறிப்பாக இந்திய நாட்டினுடைய பிரதமராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் உலகளவில் பாராட்டப்படக்கூடிய அளவுக்கு அவர் தன்னுடைய கடமைகளை, பணிகளை ஆற்றியிருக்கிறார்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், “தங்க நாற்கர சாலை” என்ற ஒரு மாபெரும் திட்டம் இந்தியா முழுவதும் அவருடைய காலக்கட்டத்திலே நிறைவேற்றப்பட்டு, அது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடிய சாதனையாக அமைந்திருக்கிறது.

தமிழகத்திலே தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், மத்தியிலே வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டபோது, தன்னுடைய ஆட்சிக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தை பற்றிக்கூட கவலைப்படாமல் அரசியல் சட்டத்தை பேணிப்பாதுகாத்து, அதற்கு ஒப்புதல் தராத நிலையில், தன்னுடைய கடமையை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

தலைவர் கருணாநிதியோடு நெருங்கிய நட்பு கொண்டு, ஒரு நெருங்கிய நண்பராக விளங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவருடைய இழப்பு என்பது நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய வருத்தத்தை தந்து கொண்டிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், குறிப்பாக அந்த இயக்கத்தைச் சார்ந்திருக்கக் கூடியவர்களுக்கும் தி.மு.க.வின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாலை நடைபெற்ற வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தி.மு.க. சார்பில் கலந்துகொண்டனர்.

Next Story